வெளிநாடுகளை அழைப்பதன் மூலமே தமிழர்கள் தீர்வினை பெற்றுக்கொள்ளமுடியும் என்று வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லை என்று ஜனாதிபதி கூறிய கருத்துக்கு நாம் கண்டனத்தை தெரிவித்துகொள்கின்றோம்.
காணாமல் போனவர்கள் இல்லை என்று சொல்வது நாம் எதிர்பார்த்தது தான். தமிழ் மக்களின் வாக்குகளுடன் வந்த அரசாங்கமும் அதனையே சொன்னது. சிங்கள மக்களின் ஆதரவுடன் வந்த அரசாங்கமும் அதனையே சொல்லியிருக்கிறது.
எனவே வெளிநாடுகள் மூலமே எமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ளமுடியும் என்பதை இவர்கள் மீண்டும்உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
அண்மையில் பல்கலைகழக மாணவர்களால் பொங்கு தமிழ் நிகழ்வு நாடாத்தப்பட்டிருந்தது. அந்த நிகழ்வை எதிர்வரும் காலம் பெருமளவில் செய்வதாக கூறியிருக்கிறார்கள். அதனை விட நாம் தமிழ்மக்களிற்கான தீர்வை எப்படி பெறப்போகின்றோம்.என்ன வழியில் பெறப்போகின்றோம் என்பதை அரசியல் தலைமைகளும் மற்றும் கல்வி சமூகமும் கூற வேண்டும்.
எனவே நாம் அனைவரும் ஒருமித்த குரலுடன் அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளை அழைப்பதன் ஊடாகதான் தமிழருகான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளலாம். -என்றனர்.